தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டில் "இடாய்' புயல் தாக்கியதில் 140 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர்.
மொசாம்பிக் நாட்டில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்திய இந்தப் புயல், தற்போது அண்டை நாடான ஜிம்பாப்வேவை தாக்கியுள்ளது. குறிப்பாக, மொசாம்பிக் எல்லையை ஒட்டியுள்ள மனிகாலாண்ட் மாகாணத்தில் பலத்த மழையுடன் புயல் காற்று வீசியதால், ஆயிரக்கணக்கானார் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், புயல் பாதிப்பு குறித்து அரசின் செய்தித் துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ""கிழக்கு சிமானிமனி நகரில் புயல் பாதிப்புக்கு இதுவரை 2 மாணவர்கள் உள்பட 140 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புயல் தாக்கியதால் 100 பேரைக் காணவில்லை என்று நாடாளுமன்ற எம்.பி. ஜோஷ்வா சாக்கோ கூறினார். அவர் மேலும் கூறியதாவது: புயல் பாதிப்புக்குப் பிறகு பலரைக் காணவில்லை. அவர்களில் சிலர் இறந்திருக்கக் கூடும். சிமானிமணி நகரின் புறநகர்ப் பகுதியில் 25 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளுக்குள் இருந்தவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இடாய் புயல், மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியை வெள்ளிக்கிழமை தாக்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மொசாம்பிக்கில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது; புயல் தாக்குவதற்கு முன்னதாகவே, மழை தொடர்பான விபத்துகளால் 66 பேர் உயிரிழந்து விட்டனர். பலர் காயமடைந்தனர். 17,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்' என்றார்.