பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நரம்புக்கோளாறு சம்மந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, துபையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
முஷாரஃப் (75) கடந்த 2016ஆம் ஆண்டு முதல் துபையில் வசித்து வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டில் ராணுவ புரட்சியின் மூலம் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய அவர் மீது, 2014-ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மீண்டும் துபைக்கு திரும்பிய அவர் அங்கேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் துபையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக அவரது கட்சியான அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏபிஎம்எல்) கட்சியின் பொது செயலாளர் மெஹ்ரீன் ஆடம் மாலிக் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: லண்டனில் சிகிச்சை பெற்று வந்த முஷாரஃப் மேல் சிகிச்சைக்காக, துபையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பிறகு முஷாரஃப் பாகிஸ்தான் திரும்புவார் என்று அவர் தெரிவித்தார்.