சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை மதியம் 12 மணி அளவில், பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், ஆலைக்கு அருகில் இருந்த கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளும் வெடி விபத்தால் சேதமடைந்துள்ளன.
வெடி விபத்து நிகழ்ந்தபோது, அப்பகுதியைச் சுற்றி 2.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. 100 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் சூழ்ந்து காட்சியளித்தது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மருத்துவர்களும், மீட்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ரசாயன ஆலைக்கு அருகே இயங்கி வந்த உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தே, இந்த வெடிவிபத்துக்குக் காரணம் என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.