சீனாவில் பூச்சிக்கொல்லி ரசாயன ஆலை வெடித்து ஏற்பட்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அதன் அருகில் இருந்த பூச்சிக்கொல்லி தயாரிக்கும் ரசாயன ஆலையில், வியாழக்கிழமை மதியம் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட அதிர்வில், அருகில் இருந்த வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்தன. 176 தீயணைப்பு வாகனங்களும், 928 தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் பலர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட 32 பேர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 58 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 88 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாயமான 28 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது. விபத்து காரணமாக ஆலைப் பகுதியிலும், ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு பகுதியிலும் காற்றின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.