சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் இயங்கி வந்த ரசாயன பூச்சிக்கொல்லி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன உரத்தொழிற்சாலையில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் பகுதியில் வியாழக்கிழமை மதியம் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் ஏற்பட்ட அதிர்வு, நிலநடுக்கத்தின்போது ரிக்டர் அளவுக்கோலில் ஏற்படும் 3 அலகுக்கு இணையானதாக கருதப்படுகிறது. வெடித்த வேகத்தில் அருகாமையில் உள்ள வீட்டு கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதுடன், குழந்தைகளை தூக்கி வீசியது.
கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் முதல்நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 47ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை இதன் எண்ணிக்கை 64ஆக அதிகரித்தது.
இதுவரை 24 பேர் மாயமாகி விட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 34 பேர் உள்பட 73 பேர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் மட்டும் மொத்தம் 640 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வெடிவிபத்து, குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.