போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்யப்படாது: எம்.பி.க்களிடம் தெரசா மே திட்டவட்டம்

போதிய ஆதரவு கிடைப்பது உறுதியாகும் வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப் போவதில்லை அந்த நாட்டு எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
போதிய ஆதரவு இல்லாமல் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்யப்படாது: எம்.பி.க்களிடம் தெரசா மே திட்டவட்டம்

போதிய ஆதரவு கிடைப்பது உறுதியாகும் வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப் போவதில்லை அந்த நாட்டு எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட்டுக்கான இறுதி தேதியை வரும் மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டுமென்றால், அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒரு வாரத்துக்குள் பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நிபந்தனை விதித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து எம்.பி.க்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய ஐரோப்பிய நாடுகளுடனான உறவு குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தால், அது நிறைவேற்றப்படுவதற்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
அவ்வாறு போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருப்பது உறுதி செய்யப்படாவிட்டால், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனையின்படி இந்த வாரத்துக்குள் அந்த ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மாட்டேன். மேலும், அந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு நாடாளுமன்ற அவைத் தலைவரின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளது என்று அந்தக் கடிதத்தில் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து இந்த மாதம் 29-யில் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டனர்.
எனினும், அந்த ஒப்பந்தம் பிரிட்டன் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் நாடாளுமன்றம் இரு முறை நிராகரித்தது. மேலும், ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட்டுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை. அதையடுத்து, பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை நீடிப்பது குறித்து ஐரோப்பிய யூனியனின் பிற 27 உறுப்பு நாடுகளுடன் தெரசா மே தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், பிரெக்ஸிட் காலக்கெடுவை இந்த மாதம் 29-ஆம் தேதியிலிருந்து மே மாதம் 22-ஆம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இரு தரப்பு உறவு குறித்த ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இன்னும் ஒரு வாரத்துக்குள் ஏற்க வேண்டும்; அல்லது மே 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பங்கேற்பதற்கு ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் சம்மதிக்க வேண்டும் என்று பிரிட்டனுக்கு அந்த அமைப்பு கடுமையான நிபந்தனை விதித்துள்ளது.
இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை பிரிட்டன் பூர்த்தி செய்யாவிட்டால், எந்தவித ஒப்பந்தமும் இல்லாமலேயே தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியேற்றப்படும் என்று ஐரோப்பிய யூனியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பங்கேற்றால் அது அந்த அமைப்புடன் பிரிட்டன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கான ஒப்புதலாக அமையும்; அது, பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான பொதுவாக்கெடுப்பு முடிவுக்கு எதிரானதாக அமைந்துவிடும்.
இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றாமல் போனால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான எந்த சிறப்பு ஒப்பந்தமும் இல்லாமல் அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் பிரிய நேரிடும்.
அவ்வாறு பிரிந்தால், இதுவரை ஐரோப்பிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் பிரிட்டன் தொழில்துறை கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.
இந்தச் சூழலில் பிரிட்டன் எம்.பி.க்களுக்கு பிரதமர் தெரசா மே இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com