ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீஃபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். இது தொடர்பாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தனது தந்தையைச் சந்தித்த பிறகு, மரியம் நவாஸ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "என் தந்தைக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து, அவரது சிறுநீரகச் செயல்பாடு மோசமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர் அதிக வலியால் அவதிப்படுகிறார்' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது தந்தைக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில், மருத்துவ நிபுணர்களையும், அவரது தனிப்பட்ட மருத்துவரையும் சிறைக்குள் அனுமதிக்கக் கோரி, கூடுதல் தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் மரியம் தெரிவித்துள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.