ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் (69) உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கி அந்நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீஃபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ் சார்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நவாஸுக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது. முன்னதாக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் நவாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.