ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கத்தாரில் புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறியதாவது:
அமெரிக்காவுக்கும், எங்களது அமைப்புக்கும் இடையிலான 6ஆவது கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது.
கத்தார் தலைநகர் தோஹாவில் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார் அவர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, அந்த நாட்டு அரசுடன்தான் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறி வந்தது.
எனினும், ஆப்கன் அரசு என்பது அமெரிக்காவின் கைப்பாவை எனவும், எனவே அமெரிக்காவுடன்தான் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தலிபான்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது.
அதன் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் ஆப்கன் போரில், தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை முதல் முறையாக மாற்றிக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில், தற்போது 6ஆவது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
எனினும், இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.