ஜப்பானின் 126ஆவது பேரரசராக நருஹிடோ (59) புதன்கிழமை முடிசூடிக்கொண்டார்.
ஜப்பான் பேரரசர் அகிஹிடோ முதுமை காரணமாக செவ்வாய்க்கிழமை அரியணை துறந்தார். அத்துடன் ஜப்பானின் ஹெய்சேய் சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இளவரசர் நருஹிடோ புதிய பேரரசராக புதன்கிழமை முடிசூடினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முடிசூடிக்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய சகாப்தமான ரெய்வா (அழகிய நல்லிணக்கம்) மே 1ஆம் தேதி தொடங்கியது.
டோக்கியோவில் உள்ள பேரரசர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் பேரரசர் அகிஹிடோ வசம் இருந்த வாள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கியப் பொருள்கள் அனைத்தும் புதிய பேரரசர் நருஹிடோவிடம் அளிக்கப்பட்டன. பேரரசருக்கான அதிகாரப்பூர்வ முத்திரையும் அவருக்கு அளிக்கப்பட்டது.
பொது மக்கள் முன்பாக, வரும் சனிக்கிழமை (மே 4) புதிய பேரரசர் நருஹிடோ உரையாற்ற உள்ளார். இந்த மாத இறுதியில், ஜப்பானுக்கு வருகை தர உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வரும் ஜப்பானில் புதிய பேரரசர் முடிசூட்டிக் கொண்டுள்ளது, அந்நாட்டு மக்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.