இலங்கையில் சிங்களர், முஸ்லிம் இடையே வன்முறை: சமூக வலைதளங்கள் முடக்கம்
இலங்கையில் சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக சமூக வலைதளங்கள் திங்கள்கிழமை முடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் ஈஸ்டர் (ஏப்.21) தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 257 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை (மே 06) திரும்பப்பெறப்பட்டது.
இந்நிலையில், தேவாலய குண்டுவெடிப்பு நடந்த நேகம்போ எனுமிடத்தில் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை திடீரென வன்முறை ஏற்பட்டது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கண்டியில் இதேபோன்று சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.