ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு சம்பவத்தினால் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் நிகழாண்டில் 7.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று மூன்று நட்சத்திர விடுதிகள், மூன்று தேவாலயங்கள் மற்றும் இரண்டு மற்ற இடங்கள் என அடுத்தடுத்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் 1,66,900 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 7.5 சதவீதம் சரிவாகும். நிகழாண்டில் ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 9,00,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது கடந்தாண்டு முதல் 4 மாதத்தை காட்டிலும் 2.2 சதவீத கூடுதலாகும்.
இந்த தாக்குதலுக்கு பிறகு இலங்கையில் விடுதிகளின் 90 சதவீத முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் இலங்கை சுற்றுலாத் துறை கடுமையாக பாதித்துள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கிஷூ கோம்ஸ் கூறுகையில், "இலங்கை பாதுகாப்பான இடம் என்று சுற்றுலாத் துறை சர்வதேச அளவில் ஒரு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளது. வரும் காலங்களில் சுற்றுலாத் துறை மீண்டு எழும் எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.