தாய்லாந்து: உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்!

தாய்லாந்தில் 15 வயது தாயால் புதைக்கப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து: உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்!


பேங்காக்: தாய்லாந்தில் 15 வயது தாயால் புதைக்கப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியதாவது: ரட்சசீமா மாகாணம், சம்பூவாங் மாவட்டத்திலுள்ள பண்ணையொன்றில், தனக்கு முறை தவறி பிறந்த ஆண் குழந்தையை 15 வயது பெண் குப்பை கூளங்களுக்குள் புதைத்துச் சென்றுள்ளார். எனினும், அந்த வழியாக வந்த "பிங் பாங்' என்ற நாய், குழந்தை புதையுண்டிருப்பதை தனது மோப்ப சக்தி மூலம் கண்டறிந்தது. உடனடியாக குழந்தை இருந்த பகுதியை சுற்றிலும் குப்பை கூளங்களைத் தோண்டி எடுத்தவாறே அந்த நாய் பலமாகக் குரைத்தது.

இதனால் எச்சரிக்கையடைந்த அந்த நாயின் உரிமையாளரும், அந்தப் பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தவர்களும் புதையுண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது அந்தக் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்தக் குழந்தையை ரகசியமாகப் பெற்றெடுத்த சிறுமி, அதனை பெற்றோரிடமிருந்து மறைப்பதற்காக குழந்தையை குப்பையில் புதைத்துவிட்டு சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அந்தச் சிறுமி கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சி மற்றும் பெற்ற குழந்தையை கைவிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸார் கூறினர். 

பெற்ற தாயால் புதைக்கப்பட்ட குழந்தையை, தனது சாதுர்யத்தால் காப்பாற்றிய "பிங் பாங்' நாய்க்கு தாய்லாந்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com