தென் ஆப்பிரிக்காவில் ஆயுத பேர ஊழல் வழக்கில் சிக்கி பதவியை இழந்த முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்.
1990-களில் ஜேக்கப் ஜூமா (77) அமைச்சராக பதவி வகித்தபோது ஆயுதங்கள் வாங்க பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. பிரான்ஸ் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான தாலேஸிடமிருந்து ஜூமா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் பதவி விலகக் கோரி ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கடந்தாண்டில் பல்வேறு போராட்டங்களை நடத்தி நெருக்கடி கொடுத்தது. இதையடுத்து, ஜூமா தனது அதிபர்பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் ஜேக்கப் ஜூமா நேரில் ஆஜரனார். அப்போது, அவரது வழக்குரைஞர் முஸி ஷிகாகானே நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது: ஜூமாவுக்கு எதிராக கடந்த 2005-ஆம் ஆண்டில் போடப்பட்ட ஊழல் வழக்கு போதிய ஆதாரங்களின்றி 2009-ஆம் ஆண்டே கைவிடப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக 2016-ஆம் ஆண்டு ஜூமா மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது முறையற்றது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஜூமா மற்றும் தாலேஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என மறுத்துள்ள நிலையில் இந்த வழக்குக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றார் அவர்.