ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய தொண்டு நிறுவனம் 1 கி.மீ. தொலைவுக்கு மிக நீண்ட இஃப்தார் விருந்தை நடத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஜோகிந்தர் சிங் சலேரியா என்ற இந்தியர் அபுதாபியில் பிசிடி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபை தொழிற்பூங்காவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் வளாகத்தில் தினந்தோறும் சைவ இஃப்தார் விருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் மிக நீண்ட இஃப்தார் விருந்துக்கு சனிக்கிழமை இந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு எந்தவித இடைவெளியுமின்றி திரண்டிருந்த மக்களுக்கு இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இதில், ஏழு வகையான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. இதனை உலகிலேயே மிக நீண்ட இஃப்தார் விருந்தாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளது.