பாரீஸ்: பாரீஸில் இந்திய விமானப்படை அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சியின் காரணமாக ரஃபேல் ஆவணங்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நடவடிக்கைகளில் தவறு இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாரீஸில் இந்திய விமானப்படை அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டு முயற்சியின் காரணமாக ரஃபேல் ஆவணங்களுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரங்களை மேற்பார்வை செய்வதற்காக அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. பிரான்சின் புறநகர் பகுதியான செயின்ட் கிளவுட் பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. ரஃபேல் விமானங்களை தயாரித்து வழங்கவுள்ள டஸால்ட் ஏவியேஷன் அலுவலகமானது இதற்கு அருகேதான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஞாயிறு இரவன்று பாரீஸில் உள்ள இந்திய விமானப்படை அலுவலகத்தில் திருட்டு முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரான்சின் புறநகர் பகுதியான செயின்ட் கிளவுட் பகுதியில் அமைந்துள்ள ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான இந்திய விமானப்படை அலுவலகத்தில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஆவணங்களோ அல்லது கணினியின் ஹார்ட் டிஸ்குகளோ திருடப்படவில்லை.
அங்கு விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லை என்பதால் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களைத் திருடவே முயற்சிகள் நடந்திருக்கலாம். இருந்தாலும் திருட்டில் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.