பீஜிங்: மோடி தலைமையிலான இந்தியா உடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக சீனா தெரிவித்தவுள்ளது.
வியாழன்று வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கூட்டணியானது 351 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து வியாழன் மதியம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மோடி தலைமையிலான இந்தியா உடனான உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக சீனா தெரிவித்தவுள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான லு காங் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
17-ஆவது இந்திய மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்றுள்ள மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமான உறவினர்கள். நாங்கள் பெரிய அளவில் முன்னேறிய நாடுகள் மட்டும் அல்லாது வளர்ந்து வரும் சந்தைகளும் ஆவோம்.
கடந்த வருடம் இருநாட்டு அதிபர்களுக்கு இடையேயான வுஹான் மாநாடானது இருநாட்டு பரஸ்பர உறவின் எதிர்காலத்திற்கான பாதையமைத்துக் கொடுத்ததுடன், ஒரு புதிய அத்தியாயத்தைத் துவங்கி வைத்தது.
ஒரு வருடம் கழிந்த நிலையில் அது சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. இருதரப்பு உறவுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
தற்போது மோடி தலைமையின் கீழ் இந்தியா உடன் பரஸ்பர அரசியல் நமபிக்கையை வலுப்படுத்தும் பொருட்டும், இருதரப்பு நலன் நாடும் ஒத்துழைப்பின் மூலம் வளர்ச்சி மற்றும் நெருக்கமான கூட்டுறவை நோக்கிச் செயலாற்ற விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.