சர்ச்சைக்குரிய பெளத்த துறவிக்கு இலங்கை அதிபர் பொதுமன்னிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சர்ச்சைக்குரிய இலங்கை பெளத்த துறவி கலகொட ஞானசாராவுக்கு, அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பெளத்த துறவிக்கு இலங்கை அதிபர் பொதுமன்னிப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சர்ச்சைக்குரிய இலங்கை பெளத்த துறவி கலகொட ஞானசாராவுக்கு, அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பௌத்த துறவியும், பொதுபல சேனையின் தலைவருமான கலகொட ஞானசாரா, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் மாயமானது தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்தது, அங்கிருந்தவர்களை மிரட்டியது, நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு 762 சிறைக் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய அதிபர் மைத்ரிபால சிறீசேனா, தற்போது கலகொட ஞானசாராவுக்கும் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகளில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பயங்கரவாத உள்நோக்கத்துடன் செயல்படுவதாக கடந்த 2013-ஆம் ஆண்டே கலகொட ஞானசாரா குற்றம் சாட்டியிருந்தார்.
ஈஸ்டர் தினத் தாக்குதலைத் தொடர்ந்து, குருணாகல், கம்பஹா உள்ளிட்ட பகுதிகளில் மசூதிகள், முஸ்லிம் சமுதாயத்தினரின் வீடுகள், கடைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன.
இந்தச் சூழலில் ஞானசாராவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com