ஜப்பானில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படும் இரண்டு "யூபாரி' முலாம்பழங்கள், 50 லட்சம் யென்னுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32 லட்சம்) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
ஜப்பானில் அறுவடை காலம் தொடங்கி, விளைபொருள்கள் மே மாத இறுதியில் ஏலத்துக்கு விடப்படும். துவக்க நாள்களில் திருவிழா போல் நடைபெறும் ஏலத்தில் அதிக விலை கொடுத்து விளைபொருள்களை வாங்க மக்கள் போட்டி போடுவர்.
அதிலும், யூபாரி நகரில் விளைவிக்கப்படும் தரம் வாய்ந்த முலாம்பழங்கள், அந்த நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்றவை.
நீண்ட காலம் சேமித்து வைக்கப்படும் மது வகைகளைப் போல, இந்தப் பழங்களை வாங்குவதும் ஆடம்பரத்தின் அடையாளமாக அந்த நாட்டில் கருதப்படுகிறது.
இந்த நிலையில், யூபாரி நகரையொட்டிய சப்போரோ நகரில் இரண்டு யூபாரி முலாம்பழங்களைக் கொண்ட தொகுதி (படம்) 50 லட்சம் யென்னுக்கு விற்பனையானது.
இது, யூபாரி முலாம்பழங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே மிகவும் கூடுதல் விலையாகும்.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டில் 32 லட்சம் யென்னுக்கு இரு யூபாரி முலாம்பழங்கள் வாங்கப்பட்டதே சாதனை அளவாக இருந்து வந்தது.