முகநூல் (ஃபேஸ்புக்) பயனாளர் தொடர்பான விவரங்களை கோருவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கய் ரோஸன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஃபேஸ்புக் நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதில் உறுதிபூண்டுள்ளது. அதனை மெய்பிக்கும் வகையில், அரசு சார்பில் கோரப்படும் முகநூல் பயனாளர் தகவல்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2018-ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நிறுவனத்திடமிருந்து முகநூல் பயனாளர் தரவுகளை கோருவதில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், பயனாளர் தரவுகளுக்கான அரசு கோரிக்கைகள் 1,03,815-லிருந்து 7 சதவீதம் அதிகரித்து 1,10,634-ஆனது.
ஒட்டுமொத்த கோரிக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா அதிக அளவில் முகநூல் பயனாளர் தரவுகளை கோரி முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில், இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன என்றார் அவர்.