விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா உளவுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு துணை அட்டர்னி ஜெனரல் ஜான் டெமெர்ஸ் கூறியதாவது:
அமெரிக்கப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களைத் திருடி, அவற்றை பொதுவெளியில் வெளியிட்டமைக்காக விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க உளவுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும், எதிரி நாடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தவும் அந்த ரகசிய தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆப்கானிஸ்தான், சிரியா, இராக், ஈரான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து தனக்கு ரகசிய தகவல்களை அளிப்பவர்கள் குறித்து விவரங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்கவும் அசாஞ்சே மறுத்துவிட்டார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் செய்தியாளர்களின் பங்களிப்பை நீதித் துறை அமைச்சகம் பெரிதும் மதிக்கிறது. எனினும், ஜூலியன் அசாஞ்சேவை ஒரு செய்தியாளராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.
அமெரிக்க சட்டத்தின்படி, உளவுத் தடுப்புச் சட்டத்திலிருந்து செய்தியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணினி நிபுணரான ஜூலியன் அசாஞ்சே, "விக்கிலீக்ஸ்' இணையதளத்தை உருவாக்கி, அதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு, பல தவறுகளை அம்பலப்படுத்தினார்.
இதற்கிடையே, பாலியல் பலாத்கார வழக்கொன்றில் தன்னை ஸ்வீடனுக்கு நாடு கடத்தக் கூடாது என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் அசாஞ்சே தாக்கல் செய்த மனு, கடந்த 2012-ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.
இந்த நிலையில், அசாஞ்சேவுக்கான அடைக்கலத்தை ஈகுவடார் விலக்கிக் கொண்டதையடுத்து, அவர் கடந்த மாதம் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஜாமீன் முறைகேடு குற்றத்துக்காக அவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் மே மாதம் 1-ஆம் தேதி 50 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
இந்த நிலையில், அசாஞ்சே மீது அமெரிக்கா உளவுக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.