பாகிஸ்தான் அரசின் பயன்பாட்டுக்காக 34 குண்டுதுளைக்காத வாகனங்களை முறைகேடாக வாங்கிய விவகாரம் தொடர்பாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபிடம் அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற இருந்த சார்க் நாடுகளின் 19-ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்காக, 34 குண்டுதுளைக்காத வாகனங்களை ஜெர்மனியில் இருந்து அப்போதைய பிரதமர் நவாஸ் தலைமையிலான அரசு கொள்முதல் செய்தது. ஆனால், திட்டமிட்டபடி இந்த உச்சிமாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த வாகனங்களை வாங்கும்போது அதற்கான வரியைச் செலுத்தவில்லை என அரசு மீது புகார் எழுந்தது.
அந்த 34 வாகனங்களில் இருபதை நவாஸும், அவரது மகள் மரியம் நவாஸும் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றஞ்சாட்டியது. மேலும், வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்காக, வெளியுறவுத் துறை அமைச்சகத்தை நவாஸ் அரசு தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் சுமத்தப்பட்டவை என்றும் நவாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸிடம் லஞ்ச ஒழிப்புத் துறை திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வரும் நவாஸ், நிரந்தர ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.