பிரேசிலின் வடக்கு பகுதியில் உள்ள அமேசோனாஸ் மாநிலத்தில் சிறை கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக அந்த சிறையின் பாதுகாவலர் கூறுகையில், சிறையில் கைதிகளுக்குள்ளே ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். சிறை அதிகாரிகள், நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், மோதலில் 15 கைதிகள் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழக்கும் அளவுக்கு இந்த சிறையில் மோதல் நடைபெற்றதில்லை. மோதல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
உலக அளவில் கைதிகள் அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2016-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுமார் 7, 26, 712 கைதிகள் அங்குள்ளனர். சிறையில் கைதிகள் அதிகம் இருப்பதால், கும்பல் வன்முறை, கைதிகளுக்குள் மோதல் ஆகியவை சிறைக்குள் அடிக்கடி நிகழும்.
இதற்கு முன்னர், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள சிறையில் சுமார் 20 மணி நேரம் நடைபெற்ற மோதலில் 56 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி, அடிக்கடி கைதிகள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு கொண்டு, மற்ற கைதிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்வது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு சிறைக்குள் ஆயுதத்துடன் நுழைந்த இளைஞர் ஒருவர், சிறைக் காவலரை சுட்டுக் கொன்று விட்டு சுமார் 92 கைதிகளை தப்பிக்க விட்டது குறிப்பிடத்தக்கது.