வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன்னை சந்தித்துப் பேச டிரம்பிடமிருந்து முழு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே திங்கள்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜப்பானுக்கு நான்கு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை டிரம்ப் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது சர்வதேச அளவில் முக்கியத்துவமான விவகாரங்கள் குறித்து இருவரும் நீண்ட ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களுடனான கருத்தரங்கில் கலந்து கொண்ட அபே கூறியதாவது:
வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன்னை எந்தவித முன் நிபந்தனையுமின்றி சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது அவருடன் வெளிப்படையான கருத்துக்களை பரிமாறிக் கொள்வேன். இந்த சந்திப்புக்கு டிரம்ப் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
கிம்முடனான நேருக்கு நேர் சந்திப்பின்போது முக்கியமாக வடகொரியாவால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் ஜப்பானியர்கள் குறித்த உணர்ச்சிகரமான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி, அணுஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
டோக்கியோவில் நடைபெற்ற அபே-டிரம்ப் பேச்சுவார்த்தையின்போது சீனாவுடனான உறவு குறித்தும் பரவலாக ஆலோசிக்கப்பட்டது.