புது தில்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு விவகாரம். அதில் தேவையில்லாமல் கருத்துத் தெரிவிப்பதை நிறுத்துமாறு சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக, இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் அக்டோபர் 31ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவற்றுக்கான புதிய ஆளுநர்களும் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கெங்சுவாங் வியாழக்கிழமை இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "உள்நாட்டு சட்டத்தைத் திருத்தி, நிர்வாக பிரதேசத்தை உருவாக்கும் இந்தியத் தரப்பின் ஒரு சார்பு நடவடிக்கை. இது சீனாவின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாக உள்ளது. இதற்குச் சட்டத் துறை ஆதரவு கிடைக்காது. தொடர்புடைய பிரதேசங்கள் சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உண்மையையும் மாற்ற முடியாது" என்று கூறியிருந்தது.
இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா, தங்களது உள்நாட்டு விவகாரத்தில் கருத்துத் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளது.