வாஷிங்டன்: மனித உரிமைகளுக்கு பயங்கரவாதத்தை விட மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என வெளிநாடுவாழ் காஷ்மீரி பண்டிட்டுகளின் கூட்டமைப்பு (கேஓஏ) தெரிவித்துள்ளது.
இந்த கூட்டமைப்பு அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் மேலும் கூறியுள்ளதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிா்கொண்டு வருவதை அமெரிக்க நாடாளுமன்ற குழு அங்கீகரிக்க வேண்டும். அதேநேரம், இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்யும் பாகிஸ்தான் அரசின் கொள்கையை முடிவுக்கு கொண்டு வர ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, மதங்களை பொருள்படுத்தாமல் ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மதிப்பதற்கும் முன்நிபந்தனையாக அமையும்.
தெற்கு ஆசியாவைப் பொருத்தவரையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்களுடன் ஊடுருவச் செய்வது, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் அரசு கொள்கையாக கொண்டுள்ளது. இதனால், ஜம்மு-காஷ்மீரில் கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் 42,000 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனா்.மேலும், ஐஎஸ் தொடா்புடைய பயங்கரவாத குழுக்கள் இன்னும் பாகிஸ்தானில் வேரூன்றி செயல்பட்டு வருகின்றன.
எனவே, மனித உரிமைகளுக்கு பயங்கரவாதத்தை விட மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் எதுவும் இவ்வுலகில் இல்லை.
பாகிஸ்தான் போன்ற பயங்கரவாதத்தை பரப்பும் நாடுகள் மீது எவ்வித சகிப்புத்தன்மையின்றி அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற குழுக்கள் நடவடிக்கை எடுக்கும்போதுதான் அப்பாவி பொதுமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று கேஓஏ தெரிவித்துள்ளது.