இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபட்ச!

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபட்ச!

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெற்றது. நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 

இவா்களைத் தவிர, இந்தத் தோ்தலில் 35 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றனா். இந்தத் தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாவட்டங்களில் வாக்குப் பதிவு அதிக விறுவிறுப்புடன் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச 52.87 சதவீத வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கோத்தபய ராஜபட்ச செய்தித்தொடர்பாளர் கேலியா ரம்புக்வாலா கூறுகையில், எங்கள் கட்சி 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே போதிய பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் அனைவரும் அமைதியுடன் இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபட்சவைப் பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

முதல் தெரிவிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அத்தகைய பெரும்பான்மையை யாரும் பெறாவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தெரிவை அடிப்படையாகக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்படும். அதைப் பொருத்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com