கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே புதனன்று ராஜிநாமா செய்துள்ளார்.
இலங்கையின் 8-ஆவது அதிபராக, சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் தம்பியுமான கோத்தபய ராஜபட்ச நவ.18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா்.
இதையடுத்து மார்ச் 1, 2020 வரையிலான குறுகிய காலகட்டத்துக்கான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கவுள்ளது. இதில் தங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பதவி வழங்க அதிபர் கோத்தபய ராஜபட்ச முடிவு செய்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பிரதமர் பதவியை தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவுக்கு வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதற்கு ஏற்ப தற்போதைய பிரதமர் ரணில் விகிரமசிங்கேவை ராஜிநாமா செய்யுமாறு கோத்தபய கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே புதனன்று ராஜிநாமா செய்துள்ளார்.
தனது ராஜிநாமா கடிதத்தை அவர் புதிய அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.