இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு மகிந்த ராஜபட்சவின் பெயரை அவரது சகோதரரும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவருமான கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே இன்று முறைப்படி பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்றுக்கொண்டார்.
இதன்மூலம் இலங்கையின் முழு அதிகாரமும் தற்போது, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை இரக்கமற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் ராஜபட்ச சகோதரர்கள் கையில் மீண்டும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, பிரதமர் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு மகிந்த ராஜபட்சவை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறீசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பிரதமராக நியமித்தார். எனினும், அந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிபராகப் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபட்ச, தெற்காசியாவில் மிக நீண்ட காலம் அதிபர் பொறுப்பை வகித்தவர் ஆவார். அத்துடன், தனது 24-ஆவது வயதில் (1970-ஆம் ஆண்டு) நாடாளுமன்ற உறுப்பினரான அவர்தான், இலங்கையில் அந்தப் பொறுப்பை ஏற்ற மிக இளைய வயதினர் ஆவார்.