இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு மகிந்த ராஜபட்சவின் பெயரை அவரது சகோதரரும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவருமான கோத்தபய ராஜபட்ச அறிவித்தார்.
இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே இன்று முறைப்படி பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மகிந்த ராஜபட்சவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச, இருநாடுகள் மற்றும் பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க கூட்டாக இணைந்து செயல்படுவோம் என்றார்.
இலங்கையின் முழு அதிகாரமும் தற்போது, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை இரக்கமற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் ராஜபட்ச சகோதரர்கள் கையில் மீண்டும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.