யூதக் குடியிருப்புகள் குறித்த அமெரிக்க நிலைப்பாடு: ஐ.நா. பொதுச் செயலர் வருத்தம்

மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ
யூதக் குடியிருப்புகள் குறித்த அமெரிக்க நிலைப்பாடு: ஐ.நா. பொதுச் செயலர் வருத்தம்


மேற்குக் கரையில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்ட விரோதமானவை அல்ல என்று அமெரிக்கா அறிவித்துள்ளது வருத்தமளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி துஜாரிக் கூறியதாவது:
மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் அமைத்துள்ள யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும், அந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கும், ஜெனீவா ஒப்பந்தத்துக்கும் எதிரானவை என்ற ஐ.நா.வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்காவின் அந்த முடிவும், அறிவிப்பும் எங்களை வருத்தமடையச் செய்துள்ளது.
ஐ.நா.வைப் பொருத்தவரை, பாலஸ்தீன விவகாரத்தில் பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களையும் உறுதியாகப் பின்பற்றும்.
பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையே அந்த தீர்மானங்களின் அடிப்படையில் நிலைத்த அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா. உறுதியுடன் இருக்கிறது என்றார் அவர்.
இஸ்ரேலுக்கும், எகிப்து, சிரியா, ஜோர்டான், இராக் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே கடந்த 1967-ஆம் நடந்த "6 நாள்' போரின் முடிவில், மேற்குக் கரை, பாலஸ்தீனம் உள்ளிட்டவற்றில் சில பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. 
அந்தப் பகுதிகளில், தங்கள் நாட்டு யூதர்களுக்கான குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்துள்ளது.
இந்தக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று உலக நாடுகள் கூறி வருகின்றன. 
ஐ.நா.வும், அவை 4-ஆவது ஜெனீவா  ஒப்பந்தத்தை மீறுவதாக கண்டித்துள்ளது.
இந்தச் சூழலில், மேற்குக் கரையில் உள்ள யூதக் குடியிருப்புகளை இனியும் சட்டவிரோதமானவையாகக் கருதப் போவதில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ திங்கள்கிழமை அறிவித்தார்.
அந்தக் குடியிருப்புகள் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானவை என்று கூறி வருவதால் எந்தப் பலனும் இல்லை; அந்த நிலைப்பாட்டால் பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் அமெரிக்க அரசு இந்த முடிவுக்கு வந்ததாக அவர் விளக்கமளித்தார்.
பாலஸ்தீன பிரச்னையில் முக்கிய அங்கம் வகிக்கும் யூதக் குடியிருப்புகள் விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் இந்த அறிவிப்பின் மூலம் ஒரு வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனினும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீனம், யூதக் குடியிருப்பு விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதன் மூலம், சர்வதேச சட்டத்தை கானக சட்டமாக மாற்ற அமெரிக்கா முயல்வதாகக் குற்றம் சாட்டியது.
இந்தச் சூழலில், யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்ற தனது நிலைப்பாட்டில் அமெரிக்காவின் அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தற்போது ஐ.நா. திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com