இம்ரான் கான், டிரம்ப் ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் வியாழக்கிழமை உரையாடினார்.
அதில், ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் மற்றும் அந்நாட்டின் ஸ்திரத்தன்மை தொடர்பாக பாகிஸ்தானின் உறுதியான நிலைப்பாடு தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
அப்போது, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக தலிபான்களால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா பேராசிரியர்களான கெவின் கிங் மற்றும் டிமோதி வீக்ஸ் ஆகியோரை விடுவிக்க உதவியதற்காக பாக். பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு காபூலில் செயல்பட்டு வந்த அமெரிக்க பல்கலை.யில் பணியாற்றிய இவ்விரு பேராசிரியர்களையும் தலிபான்கள் பிணைக் கைதிகளாக சிறைப் பிடித்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரின் விடுவிப்புக்கு பதிலாக ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அனஸ் ஹக்கானி மற்றும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்களான ஹஜி மாலி மற்றும் அப்துல் ரஷித் ஆகிய 3 பேரையும் ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்தது.