ப்ளோரிடா: அமெரிக்காவில் தனக்கு சர்ப்ரைஸாக பிறந்தநாள் வாழ்த்து சொல்ல முயன்ற மருமகனை மாமனார் ஒருவர் சுட்டுக் கொன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ளது பென்ஸகோலா நகரம். இங்கு ரிச்சர்ட் டென்னிஸ் (61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளை நார்வேயைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பெர்கன் (37) என்பவர் திருமணம் செய்துள்ளனர். முதலில் டென்னிஸ் குடும்பத்தோடு ப்ளோரிடாவில் வசித்து வந்த அவர் பின்னர் தனது சொந்த நாடான நார்வேக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று டென்னிஸின் பிறந்தநாள் என்பதால் அதற்காக மாமனாருக்கு சர்ப்ரைஸாக வாழ்த்து சொல்ல, கிறிஸ்டோபர் பெர்கன் செவ்வாய் இரவு நார்வேயிலிருந்து ப்ளோரிடாவுக்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து நேராக டென்னஸின் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் இது எதுவும் டென்னிஸுக்கோ அல்லது அவரது மனைவிக்கோ தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டையடைந்த அவர் பின்கதவு வழியாக உள்ளே செல்வதற்காக அங்குள்ள புதர் மறைவில் நின்றுள்ளார். அப்போது பின்கதவு அருகே ஏதோ சத்தம் கேட்டவுடன், கையில் விளக்கு மற்றும் துப்பாக்கியுடன் டென்னிஸ் அங்கே வந்துள்ளார். அவர் கதவைத் திறந்தவுடன் புதர் மறைவில் இருந்த கிறிஸ்டோபர், ஆவென கூச்சலிட்டுக் கொண்டே வெளியே வந்துள்ளார்.
எதிர்பாராத இந்த நடவடிக்கையினால் அதிர்ச்சியடைந்த டென்னிஸ் தன் கையில் இருந்த துப்பாக்கியால், சுட்டுள்ளார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த கிறிஸ்டோபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து ப்ளோரிடா காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வியாழனன்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாண்டா ரோசா நகர ஷெரிஃபான பாபி ஜான்சன், 'இது முற்றிலும் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்து; எனவே இதுதொடர்பாக டென்னிஸ் மீது எந்த வழக்கும் தொடுக்கப் போவதில்லை. அவர்களது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யலாம்' என்று தெரிவித்துள்ளார்.