மீண்டும் அணு ஆயுதம் மற்றும் நீண்ட தொலைவு ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபடப் போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
தங்களது குறுகிய தொலைவு ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகளை அமெரிக்கா தூண்டி வருவதற்குப் பதிலடியாக அத்தகைய சோதனைகள் நடத்தப்படும் என்று வட கொரியா கூறியுள்ளது.
இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களது தற்பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை சோதித்து வருகிறோம். ஆனால், அந்தச் சோதனைகளைக் கண்டிக்குமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளை அமெரிக்கா தூண்டியுள்ளது. அமெரிக்காவின் இந்தப் போக்கு நீடித்தால் மீண்டும் அணு ஆயுத மற்றும் நீண்ட தொலைவு ஏவுகணைப் பரிசோதனைகளில் நாங்கள் ஈடுபடுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.