வாஷிங்டன்/புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம், புவிசார் அரசியல் குறித்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் இருநாட்டுத் தலைவர்கள், உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
"வளர்ச்சிக்கான கூட்டாளிகள்' என்ற தலைப்பில் இந்தியா-அமெரிக்கா இடையேயான வியூகம் மற்றும் ஒத்துழைப்புக்கான மன்றம் (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) ஒருங்கிணைக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர்கள் ஹென்றி கெஸ்ஸிங்கர், கான்டலீஸா ரைஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அத்துடன், இருநாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சுமார் 300 பேர் இதில் கலந்துகொள்கின்றனர்.
இதுகுறித்து, யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்-இன் தலைவர் முகேஷ் அகி கூறியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு, வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியலோடு முடிந்துவிடுவதல்ல. ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகங்களை நிறுவுவது, கழிவுகள் மேலாண்மையில் கற்பது, காற்றுத் தரம் குறித்து அறிவது, விஞ்ஞானிகளை பரிமாறிக்கொள்வது என இரு நாடுகளிடையேயான உறவு விரிவடைந்துள்ளது.
வர்த்தகம் மட்டுமல்லாது, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஆற்றல் அணுகல், புத்தாக்கம் என இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு நீடிக்கும் பல்வேறு துறைகளில் இருக்கும் திறமைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். அரசியல் தவிர்த்து, இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவதும் இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாகும் என்று முகேஷ் அகி கூறினார்.