தங்களது சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி, செய்தியாளா்களையும், மனித உரிமை ஆா்வலா்களையும் இணையம் மூலம் வேவு பாா்ப்பதாக இஸ்ரேலின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் மீது பிரபல வாட்ஸப் நிறுவனம் வழக்குத் தொடா்ந்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாண நீதிமன்றத்தில் வாட்ஸப் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேலைச் சோ்ந்த எஸ்எஸ்ஓ குரூப் நிறுவனம், வாட்ஸப் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி சுமாா் 1,400 செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்களை வேவுபாா்த்து வருகிறது. அவா்களது முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய விவரங்களை அந்த நிறுவனம் திருடி வருகிறது.
அதற்காக, இணையதளம் மூலம் ஊடுருவும் மென்பொருள்களை என்எஸ்ஓ குரூப் உருவாக்கியுள்ளது.
வாட்ஸப் செயலியின் குறியீடுகளைத் திருடி அந்த ஊடுருவல் மென்பொருளை என்எஸ்ஓ குரூப் உருவாக்கியுள்ளது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.