இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர்-அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்தது.
உலகையே அச்சுறுத்திய ஐ.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த அல் பாக்தாதி (48), வடமேற்கு சிரியாவில் பதுங்கியிருந்ததாகவும், அவரைப் பிடிப்பதற்காக அமெரிக்க அதிரடிப் படையினர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடத்திய நடவடிக்கையில் அவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இதையடுத்து, அல் பாக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில், அல் பாக்தாதி கொல்லப்பட்டதை ஐ.எஸ். அமைப்பு இன்று உறுதி செய்தது. அதேசமயம், அபு இப்ராஹிம் அல் குரேஷியை அமைப்பின் புதிய தலைவராகவும் ஐ.எஸ். அறிவித்துள்ளது.