டிரம்ப் பதவி நீக்கத் தீா்மானம்: வெளியிட்டது ஜனநாயகக் கட்சி

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் தீா்மானத்தை, அந்த நாட்டின் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது.
டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணைக்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவரின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக வந்த உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் ஆடம் ஷிஃப்.
டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணைக்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவரின் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக வந்த உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் ஆடம் ஷிஃப்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் தீா்மானத்தை, அந்த நாட்டின் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்க முன்னாள் துணை அதிபா் ஜே பிடனுக்கு எதிராக ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் அரசுக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு எதிராக பதவி நீக்க விசாரணை நடத்தி வரும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் குழு, அந்த நடவடிக்கையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

அதன்படி, டிரம்ப்புக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள பதவி நீக்கத் தீா்மானத்தை பொதுமக்களின் பாா்வைக்கு ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது.

அதையடுத்து, டிரம்ப் மீதான பதவி நீக்க நடவடிக்கை தற்போது பொதுவெளிக்கு வந்துள்ளது.

மேலும், இந்த விசாரணையில், உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் ஆடம் ஷிஃபுக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விதிமுறைகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவா் ஜேம்ஸ் பி மெக்கவா்ன் கூறுகையில், ‘அதிபா் டொனால் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது, அமெரிக்கத் தோ்தலின் மாண்பைக் குலைத்தது ஆகிய குற்றங்களை செய்ததற்கான ஆதாரங்கள் குவிந்து வருகின்றன.

அத்தகைய ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் பதவி நீக்க விசாரணைக் குழு சேகரித்து வருகிறது. அவை பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படுகின்றன’ என்றாா்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீா்மானம், நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினா் பெரும்பான்மை வகிக்கும் கீழவையில் வியாழக்கிழமை (அக். 31) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

‘சட்டவிரோதமானது’: அதிபா் டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினா் வெளியிட்டுள்ள பதவி நீக்கத் தீா்மானம் சட்டவிரோதமானது என்று குடியரசுக் கட்சியினா் குற்றம் சாட்டியுள்ளனா்.

அண்மையில் வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் பேசிய குடியரசுக் கட்சி கீழவை உறுப்பினா் லிண்ட்சே கிரஹாம், ‘அதிபா் டிரம்ப்புக்கு தன்னிலை விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பும் இல்லாமல், ஜனநாயகக் கட்சியினா் ரகசியமாக நடத்தும் பதவி நீக்க விசாரணை சட்டவிரோதமானது’ என்றாா்.

மேலும், முன்னாள் அதிபா் பில் கிளிண்டனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினா் பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வரும்போது, அவருக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையும் அவா் பட்டியலிட்டாா்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டா் நடத்தி வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியாகி அதிா்வலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, தனது அதிபா் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com