ஆப்கானிஸ்தானின் ஃபரா மாகாணத் தலைநகரில் தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
ஒரு வாரத்துக்குள் ஃபரா நகரில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தும் 3-ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஃபரா மாகாண ஆளுநர் முகமது ஷோயிப் சபேத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
நகரின் சில இடங்களில் தலிபான் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே, தலைநகர் காபூலிலும் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களில் 2 முறை தாக்குதல் நடத்தினர். இதில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சூழலில், ஃபரா நகரிலும் அவர்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.