ஜெருசலேம்: பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கு மற்றும் ராக்கெட் வீச்சு சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் வரும் வாரத்தில் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அஷ்டோட் நகரில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டது இஸ்ரேலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தேசிய வானொலியான கான் பெட்டில் வியாழனன்று பேசும்போது அவர் கூறியதாவது:
பாலஸ்தீன நகரான காசா மீது போர் தொடுப்பது என்பது எங்களது கடைசி தேர்வு. இருந்தாலும் அங்கிருந்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக முழு அளவில் செயல்பட அதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை.
அஷ்டோட் நகர ராக்கெட் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றிற்கு ஹமாஸ்தான் காரணம். காஸாவில் ஹமாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டுவோம் என்று உறுதி தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.