இராக்கிலுள்ள ஷியா பிரிவினருக்கான வழிபாட்டுத் தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: இராக் தலைநகர் பாக்தாதுக்கு 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கர்பாலா நகரில் ஷியா பிரிவினருக்கான வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது.
அங்கு மொஹரம் பண்டிகையையொட்டி ஆயிரக்காணவர்கள் செவ்வாயக்கிழமை வந்திருந்தனர். கருப்பு ஆடை அணிந்து அவர்கள் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 9 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணக்கை அதிகரிக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொஹரம் பண்டிகையின்போது சன்னி பிரிவு பயங்கரவாதிகளால் குறிவைக்கப்படும் ஷியாக்கள், இந்த முறை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
மொஹரம் பண்டிகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்களில் இது மிகவும் மோசமானது ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.