மேற்குக் கரைப் பகுதியை இஸ்ரேலுடன் இணைக்கும் வாக்குறுதி: நெதன்யாகுவுக்கு சவூதி அரேபியா, துருக்கி கண்டனம்

தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளதற்கு சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட
ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்து டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் விளக்கிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்து டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் விளக்கிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.


தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்குக் கரையிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதி அளித்துள்ளதற்கு சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சவூதி மன்னரை மேற்கோள் காட்டி அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது:
மேற்குக் கரைப் பகுதியிலுள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைக்கப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் அபாயகரமான பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
அவரது இந்த அறிவிப்பு ஐ.நா. தீர்மானத்துக்கும், சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கும் எதிரானது ஆகும்.
இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) அவரச கூட்டத்துக்கு சவூதி அரசு அழைப்பு விடுத்துள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கி கண்டனம்: இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்தல் சமயங்களில் எப்போதும் சட்டவிரோதமான, பகைமையை வெளிப்படுத்தும் வகையிலான வாக்குறுதிகளை அள்ளி வீசும் பிரதமர் நெதன்யாகு, தற்போது அளித்துள்ள வாக்குறுதி இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனினும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் இறுதிவரை பாடுபடுவோம் என்றார் அவர்.
இஸ்ரேலில் இந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார்.
அந்தத் தேர்தலில் வெற்றியடைந்தால், ஏற்கெனவே இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியின் ஜோர்டான் பள்ளத்தாக்கை அந்த நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப் போவதாக நெதன்யாகு செவ்வாய்க்கிழமை வாக்குறுதி அளித்தார்.
பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு, பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதித் தீர்வு எட்டுவதற்கான வாய்ப்பை குலைத்துவிடும் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த அறிவிப்பைக் கண்டித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com