வங்கதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள், 48 ஆண்டுகள் கழித்து தற்போது அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: தேசப் பிரிவினைக்குப் பிறகு, அப்போது கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் என்று பொறிக்கப்பட்ட 8,000 எல்லைக் கற்களை பாகிஸ்தான் அரசு நிறுவியிருந்தது.
அதற்குப் பிறகு, இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்றது.
எனினும், பாகிஸ்தான் நிறுவிய எல்லைக் கற்கள் மட்டும் இதுவரை அகற்றப்படாமல் இருந்து வந்தன. இந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் பேரில் அந்தக் கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, இந்தியா-வங்கதேசம் என்று பொறிக்கப்பட்ட புதிய எல்லைக் கற்களை வங்கதேச எல்லைப் பாதுகாவல் படையினர் தற்போது பொருத்தியுள்ளனர்.
சுமார் 8,000 எல்லைக் கற்களை மாற்றியமைப்பது மிகவும் சிரமமாக இருந்தாலும், மிகவும் குறுகிய காலத்தில் இந்தப் பணியை அவர்கள் செய்து முடித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.