தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆப்கன் அதிபர் 

ஆப்கனில் அதிபர் அஷ்ரப் கனி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 24 பேர் பலியான நிலையில், அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆப்கனில் தேர்தல் பிரசார பேரணியில் குண்டுவெடிப்பு
ஆப்கனில் தேர்தல் பிரசார பேரணியில் குண்டுவெடிப்பு

காபூல்: ஆப்கனில் அதிபர் அஷ்ரப் கனி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 24 பேர் பலியான நிலையில், அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆப்கனில் தலிபான்களுடன் நடத்தி வந்த பேச்சுவார்தையை  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் முறித்துக் கொண்டார். அதையடுத்து வரும் 28-ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இதற்கான பிரசாரங்களில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தார். 

அதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று வடக்கு பர்வான் மாகாணத்தில் உள்ள சரக்கர் நகரத்தின் எல்லைப்புற  பகுதியில் பிரசார பேரணியொன்று ஏற்பாடாகி இருந்தது. அப்பேரணி துவங்கும் சமயத்தில் வெடுகுண்டுகள் நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் குறிப்பிட்ட இடத்தின் வாயில் பகுதியிவ் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 24 பேர் பலியாகினர். 31 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிபரின் தேர்தல் பிரசாரக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதிபர் அஷ்ரப் கனி காயங்கள் இன்றி தப்பித்தார்.

இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே  காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே ஒரு வெடிகுண்டு  வெடித்துள்ளது. ஆனால் அதில் பலியானவர்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை.       

இந்த சம்பவங்களுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com