சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அண்டை நாடான யேமனில் இயங்கி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர். தாக்குதலுக்குள்ளான அப்காய்க் ஆலை, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையாகும். மேலும், குராயிஸ் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வயல், சவூதி அரேபியாவின் மிக முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றாகும்.
இதையடுத்து, அராம்கோவின் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அராம்கோவின் உற்பத்தி இந்த அளவுக்குக் குறைந்துள்ளது, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருவதால் அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி மீண்டும் முழு வீச்சில் தொடங்கி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.