இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்குவதாகவும், தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்ற 1.59 கோடி வாக்காளர்கள் தகுதியுடையவர்களாக இருப்பதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசமைப்புச் சட்டப்படி, நடப்பு அதிபரின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதம் முன்பாகவே புதிய அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரியுமான கோத்தபய ராஜபட்ச, இலங்கை பொதுஜன முன்னணி (எஸ்எல்பிபி) சார்பில் போட்டியிடுகிறார்.
தற்போதைய அதிபர் சிறீசேனா, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. எனினும், தங்கள் முடிவை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.