இராக்கில் ஷியா பிரிவினரைக் குறிவைத்து இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ஷியாக்களின் புனிதத் தலமான கர்பாலா நகர் அருகே, பயணிகளுடன் சென்று கொண்டிருந்த வாகனத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
பயணிகளில் ஒருவராக அந்த வாகனம் ஏறிய பயங்கரவாதி, வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த கைப்பையை அங்கேயே விட்டுவிட்டு பிறகு இறங்கினார்.
பிறகு அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 21 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இராக்கில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த ஐ.எஸ். அமைப்பினர், அந்த நாட்டிலிருந்து முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
எனினும், மக்களோடு கலந்துள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் குழு, தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இராக்கில் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு அந்த அமைப்பு நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.