பிரதமர் நரேந்திர மோடி, 7 நாள் பயணமாக செப்.21-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். செப்.21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின் போது, ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் இடையே, இருநாடுகளுக்கிடையேயுள்ள உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
அதையடுத்து வரும் 24-ஆம் தேதி நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை மோடி நடத்துகிறார். இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் வரும் 27-ஆம் தேதி காலை உரையாற்றிய பின்னர் அன்றைக்கு மதியம் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.
நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்
இந்நிலையில், ஹூஸ்டன் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சர்வதேசம் மற்றும் வணிகப் பிரிவு இயக்குநர் கிறிஸ்டோஃபர் ஓல்ஸன் உள்ளிட்ட உயரதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அப்போது, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா ஆகியோர் உடனிருந்தனர். மேலும் அங்கிருந்த இந்தியர்கள் சாலையில் திரண்டு உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர்.