"தூய்மைக்கு முதலிடம்' கொடுக்க வேண்டுமென்பதை இந்தியாவில் தொடர்ந்து வலியுறுத்திப் பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் அதனைத் தானே செய்து காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்தியாவில் பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கில் "தூய்மை இந்தியா' திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இது தவிர தான் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும், "மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தூய்மை குறித்து மக்களுக்கு அறிவுரை கூறுவது மட்டுமல்ல, அதனை தனது வாழ்க்கையிலும் முழுமையாக கடைபிடிப்பவர் மோடி என்பதை நிரூபிக்கும் நிகழ்வு ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்தது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் சனிக்கிழமை வந்திறங்கிய மோடியை, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலா உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்கள் அனைவரிடம் மோடி கைகுலுக்கி வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது, அளிக்கப்பட்ட பூங்கொத்தை மோடி பெற்றுக் கொண்டார். அதில் இருந்து சில மலர்கள் கீழே விழுந்தன. இதனை கவனித்த மோடி உடனே அதனை குனிந்து எடுத்து, தனது அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, மற்றவர்களிடம் கைகுலுக்குவதைத் தொடர்ந்தார்.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது மோடியுடன் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர். மோடி நினைத்திருந்தால் அவர்களிடம் கூறி அந்த மலர்களை எடுக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவரே உடனடியாக மலர்களை எடுத்துக் கொடுத்தது அங்கிருந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் தூய்மை குறித்து பேசுவது மட்டுல்ல பொது இடத்தை தூய்மையாக வைத்திருப்பதை கடைபிடிப்பவர் என்பதையும் மோடி உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
இது தொடர்பான விடியோ சமூகவலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக "தூய்மை இந்தியா' திட்டத்தின் மூலம் இந்தியாவில் தூய்மைப் பேணுவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து நடத்தும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் மோடிக்கு, "குளோபல் கோல்கீப்பர்ஸ் விருது' வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.