பிரதமர் நரேந்திர மோடி, செப்.21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஹூஸ்டன் நகருக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பின் முடிவில், இரு நாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ரூ.2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் கோடி) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹூஸ்டன் நகரிலுள்ள என்ஆர்ஜி மைதானத்தில் இந்திய, அமெரிக்கர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்ட 'மோடி நலமா' (ஹெளடி மோடி) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.
இந்நிலையில், நியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி, 24-ஆம் தேதி ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 27-ஆம் தேதி காலை உரையாற்றுகிறார். பின்னர் அன்றைக்கு மதியம் அங்கிருந்து நாடு திரும்புகிறார்.